Thursday, January 5, 2012

சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

சனி பகவான் பொது


மனிதர்களாகிய நமக்கு பயம் என்பது கூடப் பிறந்தது. பயங்களிலேயே உச்சபட்ச பயம் என்பது, மரண பயம். ஆனால் அந்த மரண பயத்தை தரும் எமனுக்கு, எம தர்மராஜா என்று ஒரு பட்டம். ஏன் அவருக்கு, தர்மராஜா என்ற பட்டம்? அனைத்து மதங்களிலும், மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றி மத குருமார்கள் பேசி இருக்கிறார்கள். பரலோக வாழ்க்கையைப் பற்றி ஏசுவும், ஜன்னத் பற்றி நபிகளும் பேசியிருப்பதனால், எல்லா மதங்களிலும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை இருப்பது தெளிவாகிறது.

பாரத நாட்டிலும், வேதம் மற்றும் உபநிஷத்துகள் இதைப்பற்றி கூறியுள்ளன. மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, உடல் தொடர்புடையது அல்ல. அது ஆன்மா தொடர்புடையது. ஆன்மா பண்பட்ட நிலையை, அதாவது முக்தி நிலையை அடைந்தால் மட்டுமே பரமாத்மாவுடன் சேர இயலும். இங்கே தான் ஆன்மாவை நன்கு சோதித்து, பரமாத்மாவுடன் சேரும் தகுதி உள்ளதா என்று அறிந்து அப்ரூவல் கொடுத்து ஹால் மார்க் முத்திரை இடும் பொறுப்பை எமதர்மனிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் நாம் செய்த பாவ, புண்ணியத்தை, தர்ம, அதர்ம செயல்களை வைத்து தீர்மானிக்கிறார்.

தர்மத்தை நிலைநாட்ட அவர், விருப்பு வெறுப்பின்றி தன் கடமையை செய்வதால்தான் அவருக்கு தர்மராஜன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆன்மாவை சோதிக்கும்போது, அவர் தர நிர்ணயம் செய்கிறார். இது 24 கேரட்டா, 22 கேரட்டா அல்லது வெறும் 18 கேரட்தானா, என்று சோதித்து அறிந்த பின், அதனை தூய்மைபடுத்த வேண்டி, ஒரு பொற்கொல்லரிடம் அனுப்புகிறார். அந்த பொற்கொல்லர், அதனை, நெருப்பில் உருக்கி, தட்டி, தேய்த்து, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்து, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி விடுகிறார்.

இப்பொழுது புரிந்திருக்குமே ஆன்மாவை சொக்கத் தங்கமாக மாற்றும் அந்த பொற்கொல்லர் யார் என்று, அவர் வேறு யாருமல்ல, இந்தப் பதிவின் கதாநாயகன் சனி பகவான் தான்.

அவர் தான் நமக்கு பலவிதமான சோதனைகள், வேதனைகளைத் தந்து, நம்மை  சொக்கத்  தங்கமாக மாற்றுகிறார். இப்பொழுது புரிந்திருக்குமே, எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்னவென்று. அதனால்தான் நவகிரகங்களில், சனிபகவானுக்கு ஆயுள்காரகன் என்ற அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுவே எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் உள்ள தொடர்பு.

எமதர்மராஜனுக்கு, எருமை மாட்டை வாகனமாக கொடுத்ததே, அவர் மெதுவாக வரட்டும் என்பதற்காகத்தான். சனிபகவானுக்கும் மந்தச்சனி என்று ஒரு பெயர் உண்டு, ஏனெனில் நவகிரகங்களில் அவர் தான் மிக மெதுவாக நகர்பவர். ஒரு இராசியிலிருந்து, அடுத்த இராசிக்கு இடம் பெயர சுமார் 2 ½ வருடம் எடுத்துக் கொள்கிறார். இராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்ற சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது, உங்களுடைய இராசியிலிருந்து, கிளம்பி மீண்டும் உங்கள் இராசிக்கு வருவதற்கு, சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


மேலும் பல விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

இராம்கரன்
tamiljatakam@gmail.com